Pages

Tuesday, September 10, 2013

காமராஜ்யமே எல்லை

அன்னை சிவகாமியின் அருமைப் புதல்வன்

உன்னைப் பெற்றவள் பெருமை பெற்றவள்

உண்மை நிலைத்திட உலகே போற்றிட

தன்னையே மறந்து நன்மைகள் செய்தாய்!


பரந்த நெற்றியின் படுக்கைக் கோடுகள்

படிக்காத மேதையின் மிடுக்கான ஏடுகள்

தடித்த உதட்டில் தடிக்காத வார்த்தைகள்

துடிக்கும் இதயத்தில் துவளும் தத்துவங்கள்!


கூர்ந்த பார்வையில் கூரான அர்த்தங்கள்

உயர்ந்த மனிதனின் உயர்வான எண்ணங்கள்

நரைத்த மீசைக்குள் நரைக்காத கருத்துக்கள்

விரைத்த நடையின் அரசியல் விவேகமோ!


கருப்பு நிறமே மேனியில் எங்கும்

வெறுப்பு நீங்கிய வெள்ளை உள்ளம்

கரும்பு இனிப்பும் வெட்கம் கொள்ளும்

குறும்பு சிரிப்பில் குழந்தையே கொஞ்சும்!


காமத் துறவியே நீயா காமராஜன்?

காமம் வென்றதன் காரணப் பெயரோ!

கிராம ராஜ்யம் ராம ராஜ்யமாக

காம ராஜ்யமே சாம் ராஜ்யமானது!



விரிந்த புருவத்தை வில்லாக வளைத்து

செரிந்த பார்வையே அம்பெனத் தொடுத்து

தவிக காமனைப் பற்றி எரித்தாய்

உதவிக் கரத்தால் உயர்ந்தாய் நாட்டில்!



பதவி பேராசை பிடித்த நாட்டில்

பதவித் துறவியென பதித்தாய் ஏட்டில்

பதவி தேடி உதவிகள் செய்யாது – உன்

உதவி நாடி பதவிகள் வந்தது!



இந்திய நாட்டிற்கு இமயமே பெருமை – நீ

சிந்திய வியர்வை மண்ணுக்கு வளமை

முந்தியும் இல்லை பிந்தியும் இல்லை

இந்திய பூமிக்கு காமராஜ்யமே எல்லை!


Banuchandar

No comments:

Post a Comment

Thank You! so much for your valuable comments. It ll help me to work better.